மோசன் மாவுங்கல் – அருங்காட்சியகத்தில் ஏசுவின் உடை, மொஹம்மதுவின் சின்னம், யூதாஸின் காசுகள் என்றெல்லாம் இருந்தன – அரசியல் தொடர்புகள் அமைதி காத்தன (2)
பலவித தொல்பொருட்கள் இருந்ததாக சொல்லிக் கொண்டது: ஆலப்புழாவை சேர்ந்த மோன்சன் மாவுங்கள் பழமையான பொருட்களை விற்பனை செய்து வந்ததுடன், புரூனே சுல்தானின் கிரீடம், சதாம் உசேன் பயன்படுத்திய திருகுரான், முகமது நபி பயன்படுத்திய கின்னம், திருவிதாங்கூர் மன்னரின் சிம்மாசனம், இயேசுவை காட்டி கொடுத்து யூதர்கள் பெற்ற நாணயங்களை வைத்திருப்பதாக கூறி மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். அவர் கதைகட்டி காட்டிய பொருட்களை சமூகவலைதளங்களில் பார்த்து பிரம்மித்துவிட்டு விஐபிக்களே அவரது இல்லத்துக்கு பயணப்பட்டனர். கேரள காவல் துறையின் முன்னாள் இயக்குநர் லோக்நாத் பெகாராவும் மாவுங்கலை நம்பி அவர் அருங்காட்சியகத்துக்கு சென்றுள்ளார். அங்கு லோக்நாத் பெகாரா ஒரு சிம்மாசனத்தில் அமர்ந்து கொள்ள, பக்கத்தில் உதவி இயக்குநர் மனோஜ் ஆப்ரகாம் வாளைப் பிடித்துக் கொண்டு கம்பீரமாக புகைப்படம் எடுத்துள்ளனர். அதிகாரிகள் மட்டுமல்லாது, கேரள காங்கிரஸ் தலைவர் சுதாகரன் தொடங்கி, நடிகர் மோகன்லால் வரை இந்த அருங்காட்சியகத்துக்கு வந்து பார்வையிட்டுள்ளனர். அதையெல்லாம் புகைப்படமாக எடுத்து தனது அருங்காட்சியகத்திலேயே வைத்த மாவுங்கல், தன்னை நம்பவைக்க அதைப் பயன்படுத்திக்கொண்டார்.
சினிமாவில் நடித்தது, போட்டோக்கள் போட்டுக் கொண்டது: ரஜினியின் பாட்ஷா திரைப்படம் மாவுங்கலுக்கு ரொம்பப் பிடிக்கும். அதேபோல் தன்னையும் ஒரு நிழல் உலக தாதாவாக கருதிக்கொண்டு நாயுடன் புகைப்படம், மொட்டை மாடியில் இருந்து பின்னால் பத்துபேருடன் நடந்து வருவது போல் புகைப்படம் என பதிவிட்டு அந்தத் தளத்திலும் தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டார். தெலுங்கில் சில படங்களிலும் நடித்துள்ளார். இதற்கெல்லாம், சாதாரண மக்கள் ஏமாறுவார்கள், ஆனால், போலீஸ், அரசியல் அதிகாரிகள், போன்றோர் எப்படி ஏமாறுவார்கள் என்று தெரியவில்லை. உலக அமைதி கவுன்சில் உறுப்பினர், கேரளர்களின் சர்வதேச சங்கம் எனப் பல அமைப்புகளிலும் முக்கிய பொறுப்பில் இருந்திருக்கிறார். சர்வதேச மலையாளிகள் சார்பில், பினாராய் விஜயனுக்கு விருது கொடுக்கிறேன் என்றேல்லாம் விழா நடத்தியிருப்பதாக மலையாள ஊடகங்கள் கூறுகின்றன. ஆனால், பல விவரங்கள் மறைக்கப் படுகின்றன. பிரமுகர்களோடு தொடர்பு இருந்ததால் அவர் மீது எந்த வழக்கும் பதியாமல் பார்த்துக்கொண்டார்” என்றனர்.
அரசியல் புள்ளிக்கு தொடர்பா?: இதனிடையே மோன்சன் மாவுங்கல் விவகாரத்தில் அரசியல்வாதிகளின் பிண்ணனியும் இருப்பதாகக் கூறப்படுகிறது, என்று குறிப்பிட்டாலும் விவரங்கள் கொடுப்பதில்லை. கடந்த 2017-ம் ஆண்டில் இருந்து, 2020 நவம்பர் வரையிலான காலத்தில் தான் கிரீடம் விற்ற பணம் வருவதாகச் சொல்லி பத்து கோடி ஏமாற்றியிருக்கிறர் மாவுங்கல். இதில் கடந்த 2018 நவம்பரில் வெளிநாட்டுப் பணம் வங்கிக் கணக்கில் வருவதில் டெல்லியில் நிலவும் பிரச்சினைகளை தீர்ப்பதாகக் கூறி இப்போதைய கேரள காங்கிரஸ் தலைவர் சுதாகரன் வாக்கு கொடுத்ததால்தான் ரூ.25 லட்சம் பணம் கொடுத்ததாக பாதிக்கப்பட்ட ஒருவர் கூறியுள்ளார். தனக்கு மாவுங்கலை தெரியும் என சொல்லியிருக்கும் சுதாகரன், நிதிப் பரிவர்த்தனை தொடர்பான குற்றச்சாட்டை மறுத்துள்ளார். இதேபோல் பல்வேறு அரசியல் தலைவர்கள், காவல் துறை உயர் அதிகாரிகள் என பலரும் கேரளாவில் மோன்சன் மாவுங்கலுக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என அறிக்கை வெளியிட்ட வண்ணம் உள்ளனர்.
முதலமைச்சர் விளக்கம் தேவை என்ற கோரிக்கை: கேரளா போன்ற மாநிலத்தில், அரசு மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் ஆதரவு முதலியன இல்லாமல், இத்தகைய மோசடிகளை செய்து விட முடியாது. 2017 என்று எடுத்துக் கொண்டால் கூட, நான்கு ஆண்டுகளாக அமைதியாக இருந்து, இப்பொழுது திடீரென்று வெளி வந்து விடாது. போலியான பொருட்களை மோன்சன் மாவுங்கள் விற்பனை செய்வதாக வந்த புகாரை அடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் மோசடி மன்னனுக்கு கேரள மாநில காங்கிரஸ் தலைவர் உட்பட அரசியல் பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது[1]. இந்த நிலையில் தந்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த மத்திய இணை அமைச்சர் முரளிதரன், மோன்சனால் சாதாரண மக்கள் மட்டுமின்றி கால்வதுறையை சேர்ந்த உயர் அதிகாரிகளும் ஏமாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், முதலமைச்சரின் அலுவலகத்தை சேர்ந்த சிலர் மோன்சனுடன் தொடர்பில் இருந்ததாக குற்றம்சாட்டிய அவர், முதலமைச்சர் பினராயி விஜயன் தனது மவுனத்தை கலைத்து பதில் அளிக்க வேண்டுமென்றார்[2].
பழம்பொருள் சேகரிப்பாளர் என்ற பிம்பத்தை உருவாக்கியது: மோன்சன் தன்னை ஒரு பழம்பொருள் சேகரிப்பாளராக சில வருடங்களாகவே தன்னை ஊடகங்களில் முன்னிறுத்திக் கொண்டு இருந்தார். அவர் தன் வசம் இருக்கும் அரிய பொருட்கள் என்ற பல பேட்டிகளில் காட்டிய பொருட்கள் – வேதவியாசரால் நேரடியாக எழுதப்பட்ட மஹாபாரத சுவடி, கடலை இரண்டாக பிளக்க மோசஸ் பயன்படுத்திய கைத்தடி, இயேசு கிறிஸ்த்துவை ஒற்றிக் கொடுக்க யூதாஸ் வாங்கிய வெள்ளி நாணயங்களில் இரண்டு ….. என்று போகிறது பட்டியல் .வழக்கம் போல மார்த்தாண்ட வர்மாவின் வாள் , திப்புவின் எஸ்டைப் நாற்காலி ஆகியவையும் உண்டு .இதையெல்லாம் பெரும் பொருட்செலவில் olx வழியாக வாங்கியதாக கூறுவார். ஆனால் அக்காலகட்டத்தில் வெட்டி யூட்யூபர்கள் கூட இதை கிண்டல் செய்யவில்லை. கமுக்கமாக பேட்டி எடுத்து வந்தனர் . மோன்சன் ஒவ்வொரு தினமும் சில லகரங்கள் வரை செலவு செய்வார் . மேற்படி அரும்பொருட்களை கண்டு வியந்து புகைப்படம் எடுத்து வந்தவர்கள் பட்டியலில் முன் கேரள டிஜிபியும் அடக்கம் .அவர் டிஜிபியாக இருந்த போது தான் மோன்சனின் அருங்காட்சியகத்திற்கு சென்றாரா என்று தெரியவில்லை . இப்போது தான் ஒரு வழியாக மோன்சனை பண மோசடி வழக்கில் 26-09-2021 அன்று கைது செய்திருக்கின்றனர் .
யார் அந்த பிரபல நடிகர்?: போலீசார் தொடர் விசாரணையில் தமிழகத்தை சேர்ந்த பிரபல நடிகர் பெயரிலும் ரூ.50 மோசடி செய்ய முயன்ற தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து கொச்சி மாட்டான் சேரியில் புராதன பொருள்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ள சலாம் என்பவர் கூறியதாவது: “நான் மாட்டான்சேரியில் புராதன பொருள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளேன். மோன்சன் என்னிடம் வந்து ரூ.50 கோடிக்கு கடையை வாங்கி கொள்வதாக கூறினார். தான் தமிழ் நடிகரின் பினாமி. கடையை பார்க்க நடிகர் வருவார் என்றதை நம்பி விட்டேன். அவர் கடை வாங்குவார் என கருதிய நிலையில் அவரும், நடிகரும் வரவே இல்லை. இதன் மூலம் எனக்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது,” என்றார்.
நடிகர் பாலாவுக்கும், மோன்சனுக்கும் தொடர்பு: மோசடி மன்னனுக்கும் நடிகர் பாலாவுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது[3]. தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகர் பாலா. அஜித் நடித்த வீரம் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இது தவிர ஏராளமான மலையாள படங்களில் நடித்து உள்ளார். மோன்சனுக்கும் அவரது டிரைவர் அஜித்துக்கும் தகராறு ஏற்பட்டது. இது பற்றி அஜித் கொச்சி போலீசில் புகார் செய்தார். இந்நிலையில் அஜித்தை தொடர்பு கொண்ட நடிகர் பாலா, மோன்சன் மீதான புகாரை வாபஸ் பெற வேண்டும் என்று கூறியுள்ளார். அவர் மறுத்துவிட்டார். அஜித்தும், பாலாவும் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த ஆடியோ பரவியதன் மூலம் மோசடி மன்னன் மோன்சனுக்கும் பாலாவுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் பரவியது. இதுகுறித்து பாலா கூறியதாவது: “நான் கொச்சியில் இருந்தபோது மோன்சனின் பக்கத்து வீட்டில் வசித்தேன். இதனால், அவருக்கும் எனக்கும் பழக்கம் இருந்தது. அவர் நல்ல காரியங்கள் செய்து வந்தார். இதனால், அவரை எல்லாருக்கும் பிடிக்கும். அவர் செய்த மோசடி குறித்து எனக்கு தெரியாது. அஜித் என்னிடம் வேலை பறிபோய் விட்டது என்று கூறினார். அப்போது தான் அஜித் புகார் அளித்தது தெரியவந்தது. அப்போது அவர் மீது கொடுத்த புகாரை வாபஸ் வாங்குமாறு கூறினேன். ஆனால் அவர் செய்த மோசடி குறித்து எனக்கு எதுவும் தெரியாது,” என்று கூறினார்[4].
© வேதபிரகாஷ்
05-10-2021
[1] தினத்தந்தி, பினராயி விஜயன் தனது மவுனத்தை கலைத்து பதில் அளிக்க வேண்டுமென்றார். பழங்கால பொருட்கள் விற்பனையில் மோசடி – பிரமுகர்களுக்கு தொடர்பு..?, பதிவு : அக்டோபர் 04, 2021, 08:24 PM
[2] https://www.thanthitv.com/News/India/2021/10/04202427/2763158/Fraud-in-the-sale-of-antiques.vpf
[3] தினகரன், கைதான மோசடி மன்னனுடன் தொடர்பா? நடிகர் பாலா பேட்டி, 2021-09-29@ 00:44:13.